எங்களுக்கென தனிக்கொடி, தனியொரு அரசியல் அமைப்புச் சட்டம் வேண்டும் என நாகா இனத்தவரும்; 1949-ல் இந்தியாவுடன் இணைக்க உருவான ஒப்பந்தம் ஏற்கத்தக்கதல்ல; நாங்கள் தனியொரு நாடுதான் என்று மணிப்பூர் மாநில மெய்ட்டி இனத்தவரும் குரலெழுப்பி வரும் இவ்வேளை யில்தான் குடியுரிமை (திருத்த) மசோதா குளிர்காலக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2015-ம் ஆண்டிலிருந்தே பாஜக அரசு நிறை வேற்றியுள்ள இந்த மசோதாவின்படி, 2014 டிசம்பர் 31 தேதிய நிலவரப்படி ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் மதரீதியான கொடுமை களுக்கு ஆளாகி பின்னர் இந்தியாவில் தஞ்சம் புகுந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்த, சமண மதத்தினர், பார்சிக்கள், கிறித்துவர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு நிரந்தரக் குடியுரிமை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இதுதொடர்பான மாவட்ட, மாநில அளவி லான அதிகாரிகள் மேற்கொள்வார்கள். சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்துள்ள இதரர்கள் குடியுரிமைக்கான தேசிய பதிவேட்டின் மூலம் கண்டறியப்பட்டு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளுக்கு ஆளாக்கப்படுவார்கள். ‘இதரர்கள்’ என்பது முஸ்லிம்கள் தான் என்பதை விளக்கத் தேவை யில்லை.
பாஜக அரசு நிறைவேற்றியுள்ள இந்த மசோதா நாடு முழுவதற்குமானது என்ற பின்னணியில், வங்கதேசத்தில் இருந்து குடியேறியவர்களை கண்டறிந்து வெளியேற்ற வேண்டும் என்ற அசாம் மாநில இளைஞர்களின் மிகப்பெரிய போராட்டத்திற்குப் பிறகு கையெழுத்தான அசாம் ஒப்பந்தத்தில் நிர்ணயம் செய்யப்பட்டிருந்த 1971 மார்ச் 25 என்ற காலக்கெடு இந்த மசோதாவில் மேலும் நீட்டிக்கப்பட்டிருப்பது வடகிழக்கு மாநில மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
1955-ம் ஆண்டின் இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி குடியேறிகள் குறிப்பிட்ட சில நிபந்தனைகளை நிறை வேற்றி, தொடர்ந்து 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்தி ருந்தால் இந்திய குடிமக்களாக ஏற்றுக் கொள்ளப்படு வார்கள் என்றிருந்த நிலை இந்த மசோதாவின் மூலம் இப்போது ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது மட்டுமின்றி, மேற்கூறிய மூன்று நாடுகளைச் சேர்ந்த ஆறு மதப்பிரிவினருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்படும்; மேலும் 2017 செப்டம்பர் 7 தேதியிட்ட இரண்டு அரசு உத்தரவுகளின் மூலம் 1950-ஆம் ஆண்டின் கடவுச்சீட்டு (இந்தியாவிற்குள் நுழைவது குறித்த) விதிகள் மற்றும் 1948-ஆம் ஆண்டின் அந்நியர்கள் குறித்த உத்தரவு ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் விளைவாக இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள 2015 டிசம்பர் 31 அன்று என்பதை பின்னால் எந்தவொரு தேதியாகவும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இன்றியே திருத்திக் கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவிற்கு எதிராக கடந்த வியாழன் அன்று தொடங்கி வடகிழக்கு மாநில தலைநகர்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அகில அசாம் மாணவர்கள் சங்கம் முதல் வடகிழக்கு மாநிலங்க ளில் செயல்படும் பல்வேறு இளைஞர் அமைப்புகள், பூர்வ குடியினருக்கான அமைப்புகள் ஆகியவற்றோடு பாஜக தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும் இந்த கிளர்ச்சி களில் ஈடுபட்டுள்ளன.
பூர்வகுடிகள் அரங்கத்தின் உறுப்பினர்-செயலரான மிருணாள் ஹசாரிகா இந்தப் போராட்டம் குறித்துக் கூறுகை யில், வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பூர்வகுடி இனத்த வர் அனைவருமே இந்த மசோதாவினால் பாதிக்கப்படுவர் என்பதோடு, ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகளுக்காக களத்தில் செயல்பட்டு வரும் நாகா, மிசோ, போடோ போன்ற இனத்தவரின் போராட்டங்கள் மேலும் தீவிரமடையும் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
ஏற்கனவே வங்கதேசத்திலிருந்து வந்து குடியேறிய வர்களால் திரிபுரா மாநிலத்தில் இருந்த பூர்வகுடிமக்கள் தற்போது சிறுபான்மையினராக மாற்றப்பட்டு விட்டதைப் போலவே, வடகிழக்கில் உள்ள மற்ற மாநிலங்களிலும் பூர்வகுடி இனத்தவரின் நிலை மோசமடையவும் இது வழி வகுக்கும் என்று கூறிய ஹசாரிகா, வடகிழக்கில் வசிக்கும் பூர்வகுடி இனத்தவரிடையே உருவாகியுள்ள நல்லி ணக்கத்தையும் கலாச்சாரத்தையும் முற்றிலுமாக உடைத் தெறிவதற்கான ஒரு சதித்திட்டமாகவே இந்த மசோதா தோற்றம் அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, வடகிழக்கு மாணவர் இயக்கங்கள், இந்த மசோதாவை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை கேட்டுக் கொள்ளும் வகையிலான விண்ணப்பங்களை ஏழு மாநில ஆளுநர்களிடமும் அளித்துள்ளனர். அதே நேரத்தில் ஏழு மாநில தலைநக ரங்களிலும் ஊர்வலங்கள், ஆர்ப்பாட்டங்கள், தொடர் முழக்கப் போராட்டங்கள் கடந்த வியாழன் முதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போராட்டத்தை ஒடுக்க அரசு எந்திரம் அடக்குமுறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அசாமில் துப்பாக்கிச் சுட்டில் 2 பேர் கொல்லப்பட்டிருப்பது, எரியும் தீயில் எண்ணெய்யை ஊற்றியிருக்கிறது.
“இந்த மசோதாவை நாங்கள் முழுமையாக எதிர்க்கி றோம். வடகிழக்குப் பகுதி முழுவதிலும் உள்நுழைவு அனுமதி திட்டத்தை (Inner Line Permit) அறிமுகப்படுத்த வேண்டும். (இது ஏற்கனவே அருணாச்சலப் பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.) இந்தப் பகுதியில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனியாக ஓர் அடிப்படை ஆண்டை மையமாகக் கொண்டு குடிமக்களுக்கான தேசிய பதிவேட்டு முறை அமலாக்கப்பட வேண்டும். நிலம் மற்றும் இயற்கை வளங்க ளின் மீதான பூர்வகுடி மக்களின் உரிமைகள் உள்ளிட்டு வடகிழக்கு மாநிலங்களுக்கு விரிவான கூட்டாட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும்” என்றும் வடகிழக்கு மாணவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. வட கிழக்கில் பாஜகவை ஆதரித்து ஆட்சியில் அமர்ந்துள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் மக்களின் எழுச்சியைக் கண்டு கலக்கமுற்றுள்ளன. தில்லிக்குப் படையெடுத்து பாஜக தலைவர்களிடம் மசோதாவை நிறுத்தி வைக்கவோ, அல்லது தங்கள் மாநிலத்திற்கு இதிலிருந்து விலக்களிக்கவோ வேண்டும் என்று கோரிக்கை எழுப்பி பார்த்தனர். ஆனால் பாஜக மேலிடம் அவர்களைத் திருப்பி அனுப்பிவிட்டது.
வங்கதேசத்திலிருந்து சட்டவிரோத குடியேற்றத்தின் விளைவாக நாட்டின் வடகிழக்குப் பகுதி பெரிதும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. இந்த மசோதாவின் மூலம் 1971-க்குப் பிறகு வந்து குடியேறியவர்களை இந்து என்ற அடிப்படையில் எங்களின் மீது திணிக்கும் எந்தவொரு முயற்சியையும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இது இப்பகுதியின் சமூக-அரசியல் கட்டமைப்பையே சீரழித்து விடும். சட்டவிரோதமாக உள்ளே நுழையும் வங்க தேசத்த வர் எவராயினும் எங்களைப் பொறுத்தவரையில் அந்நி யர்தான். அவர்களின் மதம் பற்றி எங்களுக்குக் கவலை யில்லை. 1971 மார்ச் 25 என்ற கால எல்லையை நிர்ணயித்த அசாம் ஒப்பந்தத்தை மாணவர்களாகிய நாங்கள் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு பெற்ற போதிலும் அதை அமலாக்க இன்று வரை போராடித்தான் வரு கிறோம். இந்த நிலையில் இந்தப் புதிய மசோதா அதன் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைப்பதாக அமைந்துள் ளது. இந்த மசோதாவின் நோக்கத்தை நாங்கள் முழு மையாக எதிர்க்கிறோம்.
“எமது சமூகக் கட்டமைப்பு, எமது வரலாறு, எமது கலாச்சார மதிப்பீடுகள் ஆகியவை நாட்டின் இதர பகுதி யினருக்கு தெரியாதவை ஆகும். இந்நிலையில் வடகிழக்கு மாநில பூர்வகுடி மக்களின் எதிர்காலம் குறித்த எவ்வித கவலையும் நாட்டின் ஆட்சியாளர்களுக்கு இல்லை என்ப தற்கு இந்த மசோதா சமீபத்திய உதாரணமாகத் திகழ்கிறது” என்றும் மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். வங்கதேசத்தில் இருந்து குடியேறிய முஸ்லிம்களை கண்டறிந்து வெளியேற்றுவது என்ற பாஜகவின் இத்திட்டம் இப்போது வடகிழக்குப் பகுதியை கொந்தளிக்கச் செய்துள் ளது. மத வேறுபாடின்றி சட்டவிரோத குடியேற்றத்தை தடுத்து நிறுத்தவும், பூர்வகுடி மக்களின் உரிமைகளைக் காக்கவும் அவர்களை களத்தில் இறக்கியுள்ளது. ஏற்கனவே தனிநாடு, தனிக்கொடி என்ற கோரிக்கையுடன் மத்திய அரசுக்கு எதிராகத் திரண்டு செயல்பட்டு வரும் இயக்கங்களுக்கு மத்தி யில், இப்போது உருவாகியுள்ள குடியுரிமை மசோதா விற்கு எதிரான இந்த எதிர்ப்பியக்கம் வடகிழக்கு மாநில மக்களை எதை நோக்கி அழைத்துச் செல்லும் என்று தற்போது உறுதியாகக் கூறிவிட முடியாது.